குறட்டை அதிகாரிகளால் சோதனை; சுற்றுலா பயணிகள் வேதனை; போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம்
குறட்டை அதிகாரிகளால் சோதனை; சுற்றுலா பயணிகள் வேதனை; போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம்
UPDATED : ஏப் 17, 2025 04:55 AM
ADDED : ஏப் 16, 2025 09:25 PM

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், தொலை நோக்கு போக்குவரத்து மேலாண்மை திட்டம் இல்லாததால், சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதி நேரத்தை வாகன நெரிசலில் வீணாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இவர்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேருபூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம்.
தற்போது, ஊட்டி சீசன் துவங்கிய நிலையில், நாள்தோறும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும், ஊட்டி, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குன்னுார் முக்கிய நகர பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாதாகி விட்டது.
அதில், ஊட்டியில், கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, மத்திய பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி- -குன்னூர் சாலையில் காலை, மாலை, இரவு நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பது வாடிக்கையானது.
இதனால் சுற்றுலா பயணிகள் பிற சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இதனால், இவர்களின் பயண திட்டம் பாதிக்கப்படுகிறது. இதற்கு நீலகிரி மாவட்டத்துக்கான, தொலை நோக்கு போக்குவரத்து மேலாண்மை திட்டம் இல்லாதது முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
![]() |
குன்னுார்
குன்னுாரில் முக்கியத்துவம் வாய்ந்த மவுன்ட் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைபாதை அகற்றியதால், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
சுற்றுலா டாக்சிகளுக்கு, தனியாக வேறு இடங்களில், ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைக்கவும் தன்னார்வ அமைப்புகள் கலெக்டரிடம் பல முறை மனு அளித்தனர்.
தொடர்ந்து, வருவாய்த்துறை, சர்வே, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய, தனி குழு ஏற்படுத்தி தீர்வு காண, கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள், போலீசார், ஒருங்கிணைப்பு இல்லாததால் தீர்வு காணப்படவில்லை.
கூடலுார்
தமிழகம், கர்நாடகா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கூடலுார் பகுதி உள்ளது. இதனால், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். நகரில், பார்க்கிங் வசதி இன்றி ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதில், தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி; தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனைச்சாவடி வழியாக வெளி மாநில வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
அப்பகுதிகளில், வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பரிசோதனை, இ--பாஸ் சோதனை பணிகள் நடப்பதால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டி உள்ளது.
பந்தலுார்
மாநில எல்லையில் பந்தலுார் பகுதி உள்ளதால், மூன்று மாநில சுற்றுலா வாகனங்கள்; அரசு பஸ்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இப்பகுதியில் குறுகலான சாலைகள் அதிகளவில் உள்ளதால், கோடை சீசன் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கேரளா அல்லது கோவை மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்து செல்லும்போது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் தொடர்கிறது.
இதை தவிர, பந்தலுார் பஜார் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், விதிமீறிய பார்க்கிங் தளங்களாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
-நிருபர் குழு--