நேர்மைக்கு 'டிரான்ஸ்பர்' பரிசு: பந்தாடப்படும் பெண் அதிகாரி
நேர்மைக்கு 'டிரான்ஸ்பர்' பரிசு: பந்தாடப்படும் பெண் அதிகாரி
ADDED : மார் 29, 2025 02:25 AM

சிவகாசி: திருநெல்வேலி மாநகராட்சியில் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால், சிவகாசிக்கு துாக்கி அடிக்கப்பட்ட பெண் அதிகாரி, அந்த மாநகராட்சியில் முறைகேடை கண்டறிந்து தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததால், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி, 2022 ஏப்ரல் முதல் துாய்மை பணிகளை, 'ராம் அண்டு கோ' என்ற நிறுவனம் செய்து வருகிறது. இதற்காகநிறுவனத்துக்கு ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாயை, மாநகராட்சி வழங்குகிறது.
இந்நிறுவனம் துாய்மைப்பணிக்கு, 270 பணியாளர்களை நியமித்து, குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும்.
ஆனால், போதிய பணியாளர்களை நியமிக்காமல், உபகரணங்களும் வழங்காததால் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் எதிரொலியாக சுகாதார பிரிவு அதிகாரிகள், துாய்மை பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, 270 பேருக்கு பதிலாக, 170 பேரை கொண்டு துாய்மை பணிகளை மேற்கொண்டது, பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., -- பி.எப்., தொகை செலுத்தாதது, குப்பையை தரம் பிரிக்காதது, மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா, ஒப்பந்த நிறுவனத்துக்கு, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாக துறைக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து, 2025 ஜனவரியில் ஒப்பந்த நிறுவனத்துக்கு, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் நகர்நல அலுவலரை இடமாற்றம்செய்ய, ஆளுங்கட்சியினர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மேலிடத்துக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது.
இதனால் சரோஜாவை தென்காசி நகராட்சிக்கு மாற்றி, சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். தென்காசியில் நகர்நல அலுவலர் பணியிடம் இல்லாததால், காத்திருப்போர் பட்டியலில் சரோஜா வைக்கப்பட்டுள்ளார்.
சரோஜா திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்தபோது, ஒரே மாதத்தில், 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியமுறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால், அங்கிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார்.
தற்போது சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் தான் திருநெல்வேலியிலும் ஒப்பந்தம் எடுத்திருந்தது.
அடுத்தடுத்து முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த பெண் அதிகாரி பந்தாடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

