இடமாற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் மீண்டும் அதே பதவியை பிடிக்க முயற்சி
இடமாற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் மீண்டும் அதே பதவியை பிடிக்க முயற்சி
ADDED : ஆக 15, 2026 05:13 AM

சென்னை: பணியிடமாற்றம் செய்யப்பட்ட பல அதிகாரிகள், மீண்டும் அதே இடத்தை பிடிக்க, த.வெ.க., ஆட்சியிலும் முயற்சி மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 41 அரசு துறைகள் உள்ளன. நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியில் உள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது வழக்கம்.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில், இவ்வாறு பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் பரிந்துரைகளை பெற்று, அதே இடத்திற்கு திரும்ப வந்தனர்.
சேரவில்லை
த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஊரக வளர்ச்சி, நீர்வளம், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், வருவாய், வேளாண்மை, நெடுஞ்சாலை என பல துறைகளில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், பல துறைகளில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், இன்னும் புதிய பணியில் சேராமல் உள்ளனர்.
பலர் நீண்ட நாள் விடுப்பு எடுத்து, அதே பணியிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். உதாரணத்திற்கு பொதுப்பணித்துறையில், கடந்த மாதம், 16ம் தேதி, கண்காணிப்பு பொறியாளர்கள், 23 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும், புதிய பணியில் கண்காணிப்பு பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை செயலர் செல்வராஜ் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், பலர் இன்னும் பணியில் சேரவில்லை.
இதேபோல நீர்வளத்துறையில், கடந்த மாதம் போடப்பட்ட உத்தரவை பின்பற்றி, பொறியாளர்கள் பலரும் பணியில் சேராமல் விடுப்பில் சென்றுள்ளனர். இப்போது, மேல் மட்டம் வரை பேசி, மீண்டும் பழைய இடத்திற்கு திரும்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ரத்து செய்ய முயற்சி
இதுகுறித்து, தலைமை செயலக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: துறை செயலர்கள் உத்தரவிட்ட பின்னும், பலர் புதிய பணிகளில் பொறுப்பேற்காமல் உள்ளனர்.
இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக நினைத்து, பலரும் அந்த சமுதாயத்தை சேர்ந்த முக்கிய நபர்களை பிடித்து, பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய முயற்சித்து வருகின்றனர்.
பேரம்
இவ்வாறு நீண்ட காலமாக பணியில் சேராமல் உள்ளவர்கள் மீது, அரசு பணி விதிகள்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், துறை செயலர்கள் சிலர் ஆதாயத்திற்காக, அதுபோன்ற உத்தரவை மேற்கொள்ளாமல், பேரம் நடத்துவதாக சந்தேகம் எழுகிறது.
எனவே, இதுகுறித்து முதல்வர் விஜய் உரிய உத்தரவுகளை, துறை செயலர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு பதவி நீண்ட காலமாக காலியாக இருந்தால், அந்த பதவியை, நிதித்துறை திரும்ப பெற்று விடும். இதனால், துறையில் பணியிடங்கள் எண்ணிக்கை குறையும்.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் முன்பு அதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோன்று நடக்காமல் தடுக்க செயலர்கள் விரைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
