'கறார்' காட்ட முடியாததால் டில்லி பயணம்; அமித் ஷாவை சந்தித்தார் பழனிசாமி
'கறார்' காட்ட முடியாததால் டில்லி பயணம்; அமித் ஷாவை சந்தித்தார் பழனிசாமி
ADDED : மார் 20, 2026 05:23 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்துவதற்காக, கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக நேற்று டில்லி சென்றுள்ளார்.
வரும் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சு இதுவரை நடக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பழனிசாமி முடிவு செய்து விட்டதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய, பழனிசாமி நேற்று காலை டில்லி சென்றார். கடந்த ஜனவரி 7ல் டில்லி சென்ற பழனிசாமி, அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதன்பின்பே, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தார். அதன்பின், கடந்த மார்ச் 2ல் மீண்டும் டில்லி சென்று அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்தார்.
இந்நிலையில் நேற்று காலை, பழனிசாமி மீண்டும் டில்லி சென்றுள்ளார். அங்கு அமித் ஷாவை சந்தித்து, கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளை குறிப்பிட்டு ஒப்புதல் பெறுகிறார். அதேபோல, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேசி, இறுதி முடிவெடுக்க உள்ளார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் மாற்றப்பட்டது போல, தமிழகத்திலும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அமித் ஷாவிடம் வைக்க விருக்கிறார் என அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையில், தமிழக பா.ஜ., தலைவர்களுடன் தொகுதி பங்கீட்டு பேச்சை தவிர்க்கவே, பழனிசாமி டில்லி சென்றுள்ளதாக பா.ஜ., வட்டாரங்களில் கூறுகின்றனர். 40 தொகுதிகளை பா.ஜ., கேட்கும் நிலையில், 29 தொகுதிகள் தர பழனிசாமி முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் பழனிசாமியுடன் பேச்சு நடத்த இருந்தனர்.
பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் நீண்ட கால நண்பர்கள். இதனால், கூடுதல் தொகுதிகளை பெறுவது, விரும்பிய தொகுதிகளை கேட்பது போன்றவற்றில், நயினார் நாகேந்திரனால் கறாராக நடந்து கொள்ள முடியாது. அதனால்தான், அமித் ஷாவிடம் பேசி அனைத்தையும் இறுதி செய்ய, பழனிசாமி டில்லி சென்றுள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், டில்லி சென்ற பழனிசாமி நேற்று இரவு அமித் ஷா வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்நிலையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் இன்று டில்லி சென்று அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.

