தி.மு.க.,வுக்கு த.வெ.க., விஜய் காட்டிய பயம்: ராஜ்யசபா தேர்தலில் கிறிஸ்துவர்களுக்கு 'சீட்'
தி.மு.க.,வுக்கு த.வெ.க., விஜய் காட்டிய பயம்: ராஜ்யசபா தேர்தலில் கிறிஸ்துவர்களுக்கு 'சீட்'
ADDED : மார் 06, 2026 05:43 AM

சென்னை: சிறுபான்மையினர் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும், தி.மு.க., தனது கூட்டணியில் சேர்த்துள்ளது. மேலும், அந்த கூட்டணி சார்பில், இரண்டு கிறிஸ்துவர்களுக்கு ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
'சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையேதான் போட்டி' என பேசி வரும் த.வெ.க., தலைவர் விஜய், கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால், பாரம்பரியமாக தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ள கிறிஸ்துவர் ஓட்டுகளில் கணிசமான சதவீதம் த.வெ.க.,வுக்கு சென்று விடுமோ என்ற அச்சம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் வேட்பாளர்கள்
அது மட்டுமல்லாது முஸ்லிம் இளைஞர்கள், பெண்களின் ஓட்டுகளும் த.வெ.க.,வுக்கு செல்லும் என, தி.மு.க., நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பாபநாசம், நாகை, கடையநல்லுார், ராணிப்பேட்டை, ஆம்பூர், துறைமுகம், தொண்டாமுத்துார், வேடசந்துார், மதுரை மத்தி, சேப்பாக்கம் ஆகிய 10 தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனாலும், தங்களுக்கு கிடைத்து வரும் முஸ்லிம் ஓட்டுகள் குறையும் என தி.மு.க., நினைக்கிறது.
இவற்றை மனதில் வைத்து, சிறுபான்மையினர் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் பெற, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே, ஏற்கனவே கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் தவிர, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சி என மொத்தம் நான்கு முஸ்லிம் கட்சிகளை, கூட்டணியில் தி.மு.க., சேர்த்துள்ளது.
இந்த நான்கு கட்சிகளுக்கும் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில், மேலும் ஆறு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என கூறப்படுகிறது.
அதுபோல கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை பெறும் நோக்கில், தி.மு.க., கூட்டணியின் நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளில், இரண்டு எம்.பி., பதவிகள் கிறிஸ்துவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., சார்பில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஓட்டுகள் பிரியும்
எம்.எல்.ஏ.,வாக உள்ள கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜுக்கு, தி.மு.க., சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், குறைந்தது 10 தொகுதிகளில் கிறிஸ்துவர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கிறிஸ்துவரான விஜய் கட்சி துவக்கியுள்ளதால், தி.மு.க.,வுக்கு கிடைத்து வந்த சிறுபான்மையினர் ஓட்டுகள் பிரியும் வாய்ப்புள்ளது.
அதற்காக, சிறுபான்மையினர் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். முஸ்லிம் ஜமாத்துகள், கிறிஸ்துவ சபைகளை தொடர்பு கொண்டு, 'த.வெ.க.,வுக்கு ஓட்டளித்தால், பா.ஜ., அதிகாரத்திற்கு வந்துவிடும்' என பிரசாரம் செய்து வருவதன் பின்னணி இதுதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

