'யார் துரோகி.. அவரா, நானா..?' உச்சத்தில் பழனிசாமி - தங்கமணி பனிப்போர்
'யார் துரோகி.. அவரா, நானா..?' உச்சத்தில் பழனிசாமி - தங்கமணி பனிப்போர்
UPDATED : மார் 06, 2026 05:49 AM
ADDED : மார் 06, 2026 05:48 AM

- நமது நிருபர் -
நகமும் சதையுமாக இருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் தங்க மணிக்கும் இடையே விரிசல் விழுந்த தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முக்கியமானவர். ஆனாலும், தங்கமணியின் டில்லி தொடர்புகள் பழனிசாமிக்கு நெருடலாக இருந்தன.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடனான கூட்டணியை பழனிசாமி முறித்தார். அதை, தங்கமணி கடுமையாக எதிர்த்தார். இதனால், தங்க மணி மீதான நெருடல், பழனிசாமிக்கு கோபமாக மாறியது.
கோபம்
கடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் இணைந்து, 'பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும்; பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும்' என, பழனி சாமியை சந்தித்து தங்கமணி பேசினார்.
தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு எதிராக பழனிசாமியின் காய் நகர்த்தலையும் விரும்பாத தங்கமணி, 'நீங்கள் கட்சியை அழிக்கப் பார்க்கிறீர்கள்' என கண்டித்தார். இதனால், தங்கமணி மீது பழனிசாமிக்கு கோபம் அதிகமானது. அதன்பின், தங்கமணிக்கு எதிராக முழுமையாக திரும்பினார்.
இதையடுத்து, கடந்த 2024 செப்., மாதத்தில் இருந்து, கட்சி செயல்பாடுகள் குறித்து தங்கமணியுடன் ஆலோசிப்பதை பழனிசாமி நிறுத்தி விட்டார். இதனால், தங்கமணியும் பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்தார்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பழனிசாமியின் சுற்றுப்பயண துவக்க நிகழ்ச்சி, கோவையில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்தது. அதில் தங்கமணி பங்கேற்கவில்லை.
தொடர்ந்து, தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில், தன் பிரசார சுற்றுப்பயணத்தை நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார் பழனிசாமி.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தலையிட்டு, கடந்த அக்டோபர் மாதம் நாமக்கல்லில் பழனிசாமி பிரசாரக் கூட்டத்தை நடத்த செய்தார்.
இந்நிலையில், 'வரும் சட்டசபை தேர்தல் பணிகளில் தங்கமணியையும் சேர்த்துக் கொள்ளலாம்' என, மூத்த நிர்வாகிகள் பழனிசாமியிடம் கூறினர்.
ஆனால், அதை ஏற்க மறுத்தது, 'தங்கமணி தான் அடுத்த துரோகி. டில்லி ஆட்களிடம் தொடர்ச்சியாக பேசுகிறார். அவர் நமக்கு தேவையில்லை' என, சேலத்தில் இருக்கும் தன் வீட்டில் கூடிய கட்சியினரிடம் பழனிசாமி வெடித்தார்.
மூல வழக்கு
இந்த தகவல் தங்கமணியை அடைந்ததும், அவர் கொந்தளித்துள்ளார். 'பழனிசாமி முதல்வர் ஆவதற்கும், பொதுச்செயலர் ஆவதற்கும் உழைச்சிருக்கேன். கட்சி ரீதியில் என் நாமக்கல் மாவட்டத்தை பிரிக்க வேலை பார்த்தார். அது நடக்காது என தெரிந்து, உள்ளடி வேலையில் இறங்கினார்.
'வர்த்தக அணி இணைச் செயலர் ஸ்ரீதேவி மோகனுக்கு, நாமக்கல்லில் 'சீட்' கொடுக்க சொன்னால், முடியாது என்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரை எனக்கு எதிராக கொம்புசீவி விடுகிறார்.
'குமாரபாளையத்தில் எனக்கு எதிராக, தி.மு.க.,வை சேர்ந்த வெப்படை செல்வராஜை மறைமுகமாக ஆதரிக்கிறார்.
'எல்லாவற்றுக்கும் மேலாக, அமலாக்கத் துறை விசாரிக்கும் 'டாஸ்மாக்' முறைகேட்டின் மூல வழக்கு, நான் அமைச்சராக இருந்தபோது பதியப்பட்டது. அதில், என்னை கோர்த்து விடவும், டில்லியில் காய் நகர்த்தி உள்ளார். நான் துரோகி என்றால், அவர் யார்?' என, தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பழனிசாமியும், தங்க மணியும் கட்சியினர் முன் இப்படி பேசிய பின்னரே, அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் வெளியே தெரிந்தது.
தங்க மணி மட்டுமல்ல, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களையும் தனக்கு போட்டியாகவே பழனிசாமி கருதுகிறார்; அவர்களிடம் சரியாக பேசுவதில்லை.
தேர்தல் நிதி விவகாரத்திலும் ரகசியம் காக்கிறார். அதனால், அவர் மீது முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மட்டுமின்றி, பா.ஜ., தலைவர்களும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலை சந்திக்க வேண்டிய நேரத்தில், பழனிசாமி இப்படி நடந்து கொள்வது கூட்டணிக்கு நல்லதல்ல என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

