ADDED : ஜூலை 22, 2024 12:16 AM

சென்னை : 'தி.மு.க.,வில், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என பிரித்து, 117 மாவட்ட செயலர்களை நியமிக்கலாம்' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என, மொத்தம், 117 மாவட்ட செயலர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, வேகமாக செயல்படக் கூடியவர்களை மாவட்ட செயலர்களாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் உதயநிதியுடன் சேர்த்து, துரைமுருகனுக்கும் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்தும்,கட்சி மேலிடம் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ''துணை முதல்வர் பதவி கொடுத்தால், யார்தான் வேண்டாம் என்பர். நிர்வாகத்தில் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்ற ஒன்று உள்ளது. கூட்டு மந்திரி சபையாகவே இயங்குகிறோம். தலைவர் என்ன முடிவு எடுத்தாலும், சாதகமாகவே செயல்படுவோம்,'' என்றார்.