எழும்பூரில் அமைகிறது 'யூனிட்டி மால்'; மத்திய அரசு ரூ.223 கோடி பங்களிப்பு
எழும்பூரில் அமைகிறது 'யூனிட்டி மால்'; மத்திய அரசு ரூ.223 கோடி பங்களிப்பு
UPDATED : அக் 24, 2024 05:26 AM
ADDED : அக் 24, 2024 12:42 AM

சென்னை, கைத்தறித்துறை வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் 227 கோடி ரூபாய் நிதியில் 'யூனிட்டி மால்' கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளது.
மாநிலங்களில் உள்ள கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், 'யூனிட்டி மால்' அமைக்கப்படும் என, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் யூனிட்டி மால் கட்டுமானத்திற்கு, மத்திய அரசு தன் பங்களிப்பாக, 223 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. மாநில அரசு, 4 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு மொத்தமாக 227 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
யூனிட்டி மால் கட்டுவதற்கு, எழும்பூர் கோ - ஆப்டெக்ஸ் வளாகத்தில், 5.84 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இதுகுறித்து, கைத்தறி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கவும், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு என்ற கொள்கையை செயலாக்கம் செய்வதற்கும், தரமான உள்நாட்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் யூனிட்டி மால் கட்டப்படவுள்ளது.
கட்டுமான பணிகளை விரைந்து துவங்கி, 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டடத்தின் வெளிப்புறத்தில், விலை உயர்ந்த கற்களை பயன்படுத்தி ஓவியங்களும் வரையப்படவுள்ளது. கட்டடம் முழுவதும், விலை உயர்ந்த கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.