UPDATED : அக் 16, 2024 08:59 AM
ADDED : அக் 16, 2024 12:28 AM

பொங்கலுார் : ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நண்பர், உறவினர்களுக்கு பலகாரங்களை பரிமாறுவது வழக்கம்.
இதற்கென ஒரு கணிசமான தொகையை ஒதுக்க வேண்டி உள்ளது. தொழிலாளர்கள் வாங்கும் சம்பளம் வாடகை, போக்கு வரத்து, கல்வி, மருத்துவம் என அவர்கள் அன்றாட தேவைக்கே போதுமானதாக இல்லை. எனவே, தீபாவளிக்கென சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொழிலாளர்களிடம் அதிகம் உள்ளது.
தொழிலாளர்களின் இந்த லட்சியத்தை சிலர், தங்களுக்கு சாதகமான முதலீடாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வீதியிலும் பலகார சீட்டு நடத்தப்படுகிறது. வாரம், 50 முதல், 100 ரூபாய் வரை ஒவ்வொருவரும் செலுத்துகின்றனர்.
பலகார சீட்டு சேர்க்கும் நபர்கள் அதை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கின்றனர். வட்டி பணத்தில் தொழிலாளர்களுக்கு பலகாரம் வாங்கி கொடுக்கின்றனர். கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிட்டால் தொழிலாளர்களுக்கு பலகாரம் கிடைத்து விடும்.
ஒருவேளை தங்கள் பணம் திரும்ப வராவிட்டாலோ, சீட்டு நடத்தியவர்கள் வேறு ஏதேனும் தவறான தொழிலில் முதலீடு செய்து, தங்கள் முதலீடு திரும்ப கிடைக்காத போது அவர்களால் பலகாரத்தையோ, பணத்தையோ கொடுக்க முடிவதில்லை.
பணம் செலுத்தியவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும் போது வீட்டை காலி செய்துவிட்டு தப்பி விடுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி படையெடுக்கின்றனர். ஒரு சிலர் சிறிய தொகை தானே என்று விட்டு விடுகின்றனர். அனைவரும் புகார் கொடுத்தால் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
இது ஒரு தொடர்கதையாகவே மாறி விட்டது. பலகார சீட்டு யார் நடத்துகிறார்கள். பணத்தை எதில் முதலீடு செய்கின்றனர். சீட்டு நடத்துபவர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனரா. பின்புலம் என்ன என்பதை எல்லாம் யாரும் கேள்வி கேட்பது இல்லை.
இதுவே முறைகேடுகள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதற்கு போலீசார் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.