கருணாநிதி நாணய விழாவால் சலசலப்பு: துாங்க மறுக்கும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள்!
கருணாநிதி நாணய விழாவால் சலசலப்பு: துாங்க மறுக்கும் தி.மு.க., கூட்டணி தலைவர்கள்!
ADDED : ஆக 22, 2024 04:35 AM

சென்னை: கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில், தி.மு.க., -- பா.ஜ., காட்டிய நெருக்கத்தால், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு இன்னும் தொடர்கிறது.
கடந்த 2014ல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், தி.மு.க.,வும், பா.ஜ.,வும் எதிரெதிராக செயல்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், சமூக வலைதளங்களில், 'கோபேக் மோடி' என்ற பிரசாரத்தை தி.மு.க., மேற்கொண்டது.
தமிழக மக்களிடமிருந்து அதிக வரி வருவாய் பெறும் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என, மோடி அரசுக்கு எதிராக, தி.மு.க., தீவிர பிரசாரம் செய்தது. இப்படி தீவிர எதிர்ப்பு மனநிலையில் இருந்த இரு கட்சிகளும், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் காட்டிய நெருக்கம், தமிழக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
இதை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'தொட்டுப் பார், வெட்டிப் பார், ஹிந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசை பார்த்து, வறட்டு சவால் விட்ட தி.மு.க., இன்று பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைத்துள்ளது' என்றார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'கருணாநிதியை புகழ்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை' என்றார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும், 'கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டதில் அரசியல் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி' என்றனர். ஆனாலும், இது பற்றிய சலசலப்பு தி.மு.க., கூட்டணிக்குள் ஓயவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன்:
பா.ஜ.,வை எதிர்ப்பதால்தான் தி.மு.க.,வுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. இது தி.மு.க.,வுக்கும் நன்கு தெரியும். எனவே, தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் தொடர்ந்து மத்திய பா.ஜ., அரசு புறக்கணித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முக்கிய கட்சிகள் எடுக்காது.