துாங்கும் வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு செலவு ரூ.120 கோடி: சுப்பாராவ்
துாங்கும் வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு செலவு ரூ.120 கோடி: சுப்பாராவ்
UPDATED : அக் 24, 2024 05:27 AM
ADDED : அக் 24, 2024 02:00 AM

சென்னை:''அடுத்த இரண்டு ஆண்டு களில், 60 'வந்தே பாரத் சிலீப்பர்' ரயில்கள் தயாரிக்கப்படும்,'' என, ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, முதல் 'வந்தே பாரத் சிலீப்பர்' ரயில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலைக்கு கொண்டு வரப்பட்டு, பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ரயிலை, சென்னை ஐ.சி.எப். பொது மேலாளர் சுப்பாராவ் நேற்று, ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, 77 வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் வகை ரயில்களுக்கு பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முழுமையான சோதனை
நீண்ட துாரம் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, முதல் வந்தே பாரத் சிலீப்பர் ரயிலில், அடுத்த மாதம் 15க்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க உள்ளோம்.
அதன்பின், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள, ரயில்வே தரம் மற்றும் வடிமைப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். ஆனால், அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும். முழுமையான சோதனைகளுக்கு பின், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜன., அல்லது பிப்., மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்.
பயணியருக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன், இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதினால் பெரும் விபத்தை தவிர்க்கும் விதத்தில், பாதுகாப்பு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு வந்தே பாரத் சிலீப்பர் ரயில் தயாரிக்க, 120 கோடி ரூபாய் செலவாகிறது.
முதற்கட்டமாக, 10 ரயில்கள் தயாரிக்கப்படும். படிப்படியாக, மேலும் 50 ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த ரயில்கள் தயாரிக்கப்படும்.
பிரத்யேகம்
தற்போது, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் சிலீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, 24 பெட்டிகள் கொண்ட ரயில்களும் தயாரிக்கப்படும். இந்த நிதியாண்டில் மொத்தம் 3,500 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில், 2,500 எல்.எச்.பி. பெட்டிகள் இருக்கும்.
இது தவிர, ஏழு 'நமோ வந்தே மெட்ரோ' தயாரிக்க 'ஆர்டர்' பெறப்பட்டுள்ளது. இதேபோல், பார்சல் பொருட்களை கொண்டு செல்ல, பிரத்யேக வந்தே பாரத் பார்சல் ரயிலும் தயாரிக்கப்பட உள்ளது.
ஹைட்ரஜன் ரயில்
சென்னை -- புதுடில்லி இடையே, தற்போது மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில், 150 கி.மீ., வேகத்தில் செல்வதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு ஒரு 'ஏசி' மின்சார ரயில் தயாரிக்க, வாரியம் உத்தர விட்டுள்ளது. அதன்படி, 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், டிசம்பருக்குள் தயாரித்து வழங்கப்படும்.
மேலும், தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான, முதற்கட்டப் பணிகள் துவங்கி உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், இந்த ரயிலின் தயாரிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.