விஜய் ஒரு பூஜ்ஜியம் மாதிரி தனியாக இருந்தால் மதிப்பில்லை: தமிழிசை திடீர் கண்டுபிடிப்பு
விஜய் ஒரு பூஜ்ஜியம் மாதிரி தனியாக இருந்தால் மதிப்பில்லை: தமிழிசை திடீர் கண்டுபிடிப்பு
ADDED : ஜன 27, 2026 04:09 AM

சென்னை: ''விஜய் ஒரு பூஜ்ஜியம் மாதிரி; பூஜ்ஜியம் தனியாக இருந்தால், ஒருபோதும் மதிப்பு கிடையாது. அதே பூஜ்ஜியம், மதிப்புமிக்க இன்னொருத்தருடன் சேர்ந்தால் மட்டுமே மதிப்பு,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நேற்று பங்கேற்ற தமிழிசை அளித்த பேட்டி: பன்முகத் தன்மையை கொண்டாடுவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், அதை ஒரு போதும் பின்பற்றுவதில்லை. மகன் உதயநிதியை முதல்வராக்க பாடுபடுவதை தவிர, வேறு வேலை பார்ப்பதில்லை. நடிகர் விஜய்க்கு அனுபவம் போதாது. அவர் தனித்து விடப்பட்டதால், புரியாமல் பேசுகிறார்.
சின்ன பையன்
மருத்துவத் துறையில் உச்சத்தில் இருந்த நான், சிவில் சர்வீசில் உச்சத்தில் இருந்த அண்ணாமலை உட்பட பலர் அரசியலுக்கு வந்துள்ளோம். முப்பதாண்டு காலம் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த விஜய், தியாகம் செய்வதாக பேசினார். ஆனால், ஒரு தியாகமும் செய்யாமல், திடீரென அரசியலுக்கு வந்திருக்கிறார்.
அவர் விமர்சிப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிப்பு குறைந்து போய்விடாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் போட்டி என்பதே, தி.மு.க., - தே.ஜ., கூட்டணி இடையே தான். விஜய்க்கு அரசியலில் அனுபவம் இல்லை; சின்ன பையன் மாதிரி பேசுகிறார்.
உண்மையிலேயே விஜய்க்கு தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருக்குமானால், அவர் கூட்டணி அமைக்க வேண்டும். இல்லை, வேறு கூட்டணியில் சேர வேண்டும். தற்போது விஜய் ஒரு பூஜ்ஜியம். அந்த பூஜ்ஜியம் தனியாக இருந்தால், மதிப்பு கிடையாது. அதே பூஜ்ஜியம் மதிப்புமிக்க இன்னொருத்தருடன் சேர்ந்தால் மட்டுமே மதிப்பு.
தினமும் பதற்றம்
தொண்டர்கள், ரசிகர்களின் உழைப்பை விஜய் ஏமாற்றி விடக்கூடாது. வெற்றி பெறும் கூட்டணிக்கு, விஜய் ஆதரவளிக்க வேண்டும். தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விஜய் பிரச்னை இல்லாமல் அரசியல் செய்யலாம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அவர் கரூரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தி.மு.க., வெற்றி பெறும் என்று, அதன் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை. காங்கிரசில் சூரியனை பார்த்து கும்பிடுவோரை விட, விசில் அடிப்போர் தான் அதிகம் உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் தினமும் பதற்றம் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

