ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் கட்சி முடிவு?
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் கட்சி முடிவு?
ADDED : டிச 17, 2024 06:23 AM

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸே போட்டியிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த இடைத்தேர்தல், தி.மு.க., ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும் என்பதால், இத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி உள்ளது.
இதற்காக, இப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களை, ஈரோடு நோக்கி தி.மு.க., தலைமை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இடைத்தேர்தல் என்றாலே ஆட்சி, அதிகார, பண பலத்தால் ஆளும்கட்சியே வெல்லும் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணிக்கலாம் என்ற முடிவுக்கு அ.தி.மு.க., தலைமை வந்திருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ச்சியாக தேர்தலை புறக்கணிப்பது சரியாக இருக்காது என்று சொல்லி, அ.தி.மு.க., தலைமையை இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டது போல, பா.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி கொங்கு பகுதியில் வருவதால், அங்கே பலமாக இருக்கும் பா.ஜ., தரப்பில் போட்டியிட விரும்புகின்றனர்.
பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் தன் கட்சிக்கு சித்தாந்த ரீதியில் எதிரானவை என, கட்சி மாநாட்டின் வாயிலாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என நடிகர் விஜயை, கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அத்தொகுதியில் த.வெ.க., சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் நடிகர் விஜய், கட்சியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்கச் சொல்லி இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
-நமது நிருபர்_