அ.தி.மு.க., முயற்சியை முறியடிக்க சீமானுக்கு விஜய் தரப்பு துாது
அ.தி.மு.க., முயற்சியை முறியடிக்க சீமானுக்கு விஜய் தரப்பு துாது
ADDED : மார் 18, 2025 06:05 AM

நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்கும் அ.தி.மு.க., முயற்சியை முறியடிக்க, த.வெ.க., தலைவர் விஜய் தரப்பில், சீமானுக்கு துாது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கு த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தரப்பில் காய் நகர்த்தப்பட்டது. தனித்து போட்டி அல்லது தன் தலைமையில் தான் கூட்டணி என, நடிகர் விஜய் கூறியதால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடக்கும் த.வெ.க., பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க, விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும், 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, தஞ்சாவூரில் இருந்து நடைபயணம் துவக்கம் உள்ளிட்ட முடிவுகளும், பொதுக்குழுவில் எடுக்கப்பட உள்ளது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வீட்டுக்கு ஒரு ஓட்டு உறுதி என்ற கணக்கில், 234 தொகுதிகளில் 25 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என, விஜய் தரப்பில் உறுதியாக நம்புகின்றனர். 'பெரிய வெற்றிக்கு கூடுதலாக, 15 சதவீதம் ஓட்டுகள் பெறுவது அவசியம்; அதற்கு கூட்டணி அவசியம்' என, விஜய்க்கு கட்சியின் ஆலோசகர் சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து, நா.த.க., உள்ளிட்ட சில சிறிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என கணக்கு போட்டு, சீமானை சந்திக்க, விஜய் தரப்பில் துாது போய் உள்ளனர். தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக உள்ள சீமான், விஜய் துாதரிடம் பிடிகொடுக்காமல் பேசி அனுப்பி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -