ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கான பின்னணி என்ன?
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கான பின்னணி என்ன?
ADDED : மே 04, 2025 01:06 AM

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பதுடன், ஓட்டு சதவீதம் குறைவதை தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்; இது திட்டங்கள், கொள்கைகளை வகுத்து, அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கடைசியாக, 2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த, 2021ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
எதிர்ப்பு
இந்த சூழ்நிலையில், அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் வாயிலாக, 1931க்குப் பின் நாட்டில் நடக்கும் முதல் முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது, கலவையான விமர்சனங்களை முன்வைத்துஉள்ளன.
எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்கடிக்கு பணிந்து, மத்திய அரசு இதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பல அரசியல் நோக்கங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்வராக உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார், தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.
முன்பு, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் ஆட்சி அமைத்திருந்தபோது, 2023ல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார்.
இதைத் தொடர்ந்தே, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என, பல மாநிலங்களிலும், ஜாதிவாரி மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
பீஹார் அரசியலில் ஜாதிவாரி ஓட்டுகளே முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.
அதுபோல, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், 2027ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 80ல் 33ல் மட்டுமே பா.ஜ., வென்றது.
இதற்கு முக்கிய காரணம், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆதரவு கிடைக்காததே. மாநில மக்கள் தொகையில், இப்பிரிவினர், 50 சதவீதம் உள்ளனர்.
மக்கள் தொகை
அதனால், மத்திய அரசின் தற்போதைய முடிவு, அரசியல் நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட ஒன்றாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் அதன்பின் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னையாக முன்வைத்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக, 1931ல் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், நாட்டில், 4,147 ஜாதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், உட்பிரிவுகளும் அதிகளவில் உள்ளன.
லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சிறப்புமிக்க சட்டத்தை, பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
வரும், 2026க்குப் பின் நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்யப்படும் என, 1971ல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
அதற்கு முன்பாக, தற்போது நடத்தப்பட உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு, இவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -