காங்., ஐவர் குழு அறிவிப்பில் மரபை மீறியதாக புகைச்சல்.. பின்னணி என்ன; சர்ச்சையில் சிக்கும் மாநில தலைமை
காங்., ஐவர் குழு அறிவிப்பில் மரபை மீறியதாக புகைச்சல்.. பின்னணி என்ன; சர்ச்சையில் சிக்கும் மாநில தலைமை
ADDED : டிச 01, 2025 05:54 AM

மதுரை: 'தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக தமிழக காங்.,கில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு அறிவிப்பில் மரபு மீறப்பட்டுள்ளது' என சீனியர் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. இதற்காக தி.மு.க., கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை காங்., தேசிய தலைவர் அமைத்துள்ளதாக தமிழக காங்., சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் '2026 சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலை நடத்த கிரிஷ் சோடங்கர், தமிழக காங்., தலைவர், அகில இந்திய செயலாளர்கள் சூரஜ், ஹெக்டே நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றுள்ளனர் என கார்க்கே அறிவித்துள்ளார்' எனவும் தெரிவிக்கப் பட்டது.
இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை அகில இந்திய தலைமை வெளியிடும்.
தற்போது எல்லா அறிவிப்பும் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் கையெழுத்துடன் வெளியாகின்றன. ஆனால் இந்த அறிக்கை அவ்வாறு வெளியாகவில்லை. இதில் மரபு மீறப்பட்டுள்ளது என சீனியர் தலைவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுடன் கூட்டணி என ஒரு கோஷ்டியும், ஆட்சியில் பங்கு என்று கொளுத்திப்போட்டு த.வெ.க., வுடன் கூட்டணி அமைக்கலாம் என ஒரு கோஷ்டியும் உருவாகியுள்ளது. இதனால் காங்., - த.வெ.க., கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியானது.
இச்சூழலில் தான் சென்னையில் நடந்த 'திராவிடம் 2.0 ஏன் எதற்கு' என்ற நுால் வெளியீட்டு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஒரு அதிருப்தியை கலகலப்பாக வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், 'நாங்கள் உள்ளே வரும்போது செல்வப்பெருந்தகை இல்லை. அவசர அழைப்பு காரணமாக வெளியில் சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்றவர் மீண்டும் வந்து விட்டார். ஆனால் அதற்குள் 'உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்' என பத்திரிகை நண்பர்கள் தலைப்பு செய்தியெல்லாம் ரெடி பண்ணிட்டாங்க என ஜாலியாக 'கமென்ட்' செய்தார்.
இதில் 'ஜெர்க்' ஆன செல்வப்பெருந்தகை அந்நிகழ்ச்சிக்கு தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் வகையில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக ஐவர் குழுவை அறிவிப்பு வெளியிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'அகில இந்திய காங்.,கில் இருந்து சற்று நேரத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வரும்' என தெரிவித்தார். அவர் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் மறுநாள் மாநில தலைமையே தொகுதி பங்கீடு குறித்து பேசும் ஐவர் குழு அறிவிப்பை வெளியிட்டது.
இதன் பின்னணியில், 'தமிழக காங்., தலைமை மீது வேணுகோபால் அதிருப்தியில் இருந்துள்ளதால் ஐவர் குழு அறிவிப்பை அவர் வெளியிட முன்வரவில்லை எனவும், இத்தகவல் தெரிந்து, கார்க்கேயிடம் உள்ள நெருக்கத்தை பயன்படுத்திய மாநில தலைமையே அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும்' தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இது மரபு மீறல் என பெரும்பாலான சீனியர் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு கூறினர்.

