UPDATED : ஜன 04, 2024 05:34 AM
ADDED : ஜன 03, 2024 11:24 PM

சென்னை: பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி வழங்கும் மத்திய அரசின், 'விஸ்வகர்மா' திட்டம் துவங்கி, மூன்று மாதங்களாகியும், தமிழகத்தின் செயல்படுத்தப்படும் சுவடு தெரியவில்லை.
பொற்கொல்லர், குயவர், சிற்பி, தச்சர், தையல்காரர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன் பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், 2023 செப்., 17ல் துவக்கப்பட்டது.
திட்டத்தின் கீழ், கை வினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் ஒவ்வொரு நாளும், 500 ரூபாய் உதவித்தொகை உண்டு. 5 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கடனும் உண்டு. திரும்ப செலுத்த, 30 மாதம் வரை அவகாசம் அளிப்பதுடன், மானியமும் வழங்கப்படுகிறது.
இதற்காக மத்திய அரசு, 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
விஸ்வகர்மா திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே, குலக்கல்வியை ஊக்குவிப்பது போல் இருப்பதாக, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. திட்டத்தின் நோக்கம், வழிகாட்டுதல் தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில திட்டக் குழு துணை தலைவர் தலைமையில் குழுவும் அமைத்தது.
அக்குழுவில், நகராட்சி நிர்வாக துறை செயலர், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் உட்பட, நான்கு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் செயல்படும் குழு, இதுவரை அறிக்கை சமர்ப்பித்ததா எனத் தெரியவில்லை.
இதுகுறித்து, பொற்கொல்லர்கள் கூறுகையில், 'ஆபரணங்கள் வடிவமைப்பிற்கு, நவீன கருவிகள் வந்துள்ளன; இருப்பினும், கையால் செய்யப்பட்ட ஆபரணத்தை வாங்க, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
'புதிதாக பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு பயிற்சியும், நிதி உதவியும் கிடைக்க, விஸ்வகர்மா திட்டம் உதவியாக இருக்கும். எனவே, அத்திட்டத்தை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கின்றனர்.