ADDED : செப் 26, 2025 12:15 AM

ஆந்திர அரசியலில் அதிரடிக்கு பெயர் பெற்ற துணை முதல்வர் பவன் கல்யாண், 54, சமீபகாலமாக அமைதி காத்து வருவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில், 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராகவும், ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணி தர்மத்தின்படி, பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தார் சந்திரபாபு நாயுடு.
கண்டுகொள்வதில்லை
துணை முதல்வராக பதவியேற்றதும், ஆந்திர அரசியலில் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற பவன் கல்யாண், சமீபகாலமாக எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் அமைதி காப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா முழுதும் அவரது பெயர் தற்போது எதிரொலிக்கிறது. ஆனால் அரசியலுக்காக அல்ல; நடிகர் என்பதற்காக. 'பவர் ஸ்டார்' என அழைக்கப்படும் துணை முதல்வர் பவன் கல்யாணின் ஓஜி என்ற திரைப்படம் நேற்று வெளியானது.
இந்த படத்துக்கு ஆந்திர அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. மேலும், முதல் நான்கு நாட்களுக்கு, ஒரு டிக்கெட்டின் கட்டணமாக, 1,000 ரூபாய் வரை வசூலிக்கவும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மாநில அரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
இந்த சலுகை வேறு எந்த நடிகரின் படங்களுக்கும் வழங்கப்படாது என்றும் அரசு தெளிவு படுத்தியுள்ளது.
இதற்கிடையே, யாதாத்ரி -புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதலா பரமேஷ் என்ற பவன் கல்யாணின் ரசிகர், சவுடுபுல்லில் உள்ள சீனிவாசா திரையரங்கில், முதல் நாள் முதல் காட்சிக்கான ஒரு டிக்கெட்டை, ஏலத்தில் பங்கேற்று, 1,29,999 ரூபாய் என்ற அதிக விலைக்கு வாங்கி உள்ளார்.
சினிமாவில் துணை முதல்வர் பவன் கல்யாணின் செல்வாக்கு இப்படி இருக்கையில், அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தில் அமைதியாகி விட்டார்.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., நிர்வாகிகளால், 'புயல்' என அழைக்கப்பட்டவர் பவன் கல்யாண். தற்போது அந்த புயல் பலவீனமடைந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்பு, அரசு நிர்வாகம் தொடர்பாக மிகத் தீவிரமாக எதிர்வினையாற்றிய பவன் கல்யாண், சமீபகாலமாக எதையும் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு அரசில் எல்லாம் சரியாக இருக்கிறது எனக் கூற முடியாது என்றாலும், அவரது இந்த மவுனம், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு பெரிய இடத்தை வழங்கியுள்ளது.
கலக்கம்
எனினும், ஆளும் தெலுங்கு தேசம் நிம்மதியாக இருக்கிறது. காரணம், அரசை எதிர்க்கட்சி விமர்சிப்பது வழக்கம். அதுவே, கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் துணை முதல்வர் விமர்சித்தால் பெரும் தலைவலி ஏற்படும்.
உதாரணமாக, கடந்த ஜனவரியில் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பக்தர்கள் உயிரிழந்த போது, துணை முதல்வர் பவன் கல்யாண் தனி விமானத்தில் மருத்துவமனைக்கு விரைந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.
மேலும், பொது வினியோகத்திற்காக ஒதுக்கப்பட்ட, 1,300 டன் அரிசி காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து கப்பலில் கடத்தப்படுவதை அறிந்த போது, அந்த கப்பலை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அரசு சம்பவங்களில் இப்படி தீவிரமாக இருந்த பவன் கல்யாண், திடீரென அமைதியாகி விட்டது, அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், ஒரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திக்க விரும்பிய போது, 'தன் துறை அதிகாரிகளை தவிர வேறு எந்த அதிகாரிகளையும் சந்திக்கப் போவதில்லை' என, பவன் கல்யாண் கூறி விட்டாராம்.
ஆட்சியிலும், கட்சியிலும் தன் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷை முன்னிலைப்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு வழிவிடும் வகையில், பவன் கல்யாண் மவுனம் காப்பதாகவும், இதற்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -