ராமதாசை முதல்வர் விமர்சித்த விவகாரம் பழனிசாமி வாய் திறக்க மறுப்பது ஏன்?
ராமதாசை முதல்வர் விமர்சித்த விவகாரம் பழனிசாமி வாய் திறக்க மறுப்பது ஏன்?
UPDATED : நவ 28, 2024 03:16 AM
ADDED : நவ 27, 2024 08:46 PM

'அவருக்கு வேறு வேலையே இல்லை; அவர் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் திடீர் அதிர்வலையை ஏற்படுத்தியது. அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், முதல்வர் விமர்சனத்தை கண்டித்த வேளையில், 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
'மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை' என, அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் காட்டமாக பதில் சொல்ல, மாநிலம் முழுதும் முதல்வரை கண்டித்து, பா.ம.க.,வினர் போராட்டம் நடத்தினர்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள, சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டப திறப்பு விழா, வரும் 29ல் நடக்கவிருந்தது. முதல்வர் திறந்து வைக்கவிருந்தார். பா.ம.க.,வுக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த சூழலில், இவ்விவகாரம் வெடித்ததால், அந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில், முதல்வரின் விமர்சனத்தை ஆட்சேபித்து, அண்ணாமலை, தமிழிசை, வாசன், தினகரன், சீமான் என பலரும் கருத்து தெரிவித்தனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மட்டும் மவுனம் காத்தார்.
அதற்கான காரணம் குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தனர். 'கரப்பான் பூச்சி போல ஊர்ந்து போய் சசிகலா காலைப் பிடித்து பதவி பிடித்தவர்' என்று, பழனிசாமியை மோசமாக விமர்சித்தனர்.
அது குறித்து ராமதாசோ, அன்புமணியோ வாய் திறக்கவில்லை; எதுவும் தெரியாததுபோல இருந்து விட்டனர். அப்படி இருக்கையில், ராமதாசை முதல்வர் பேசியதற்கு, நாம் ஏன் எதிர்ப்பு சொல்ல வேண்டும் என, பேசாமல் இருந்து விட்டார் பழனிசாமி.
மேலும், கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வுடன் கடைசி வரை பேச்சு நடத்தி விட்டு, வெளியே சென்று, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பா.ம.க., தலைமை. அந்த கோபம் இன்னமும் பழனிசாமிக்கு இருக்கிறது.
அது மட்டுமல்ல, பா.ம.க., வற்புறுத்தலை தொடர்ந்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை, முதல்வராக இருந்த பழனிசாமி அறிவித்தார். அதனாலேயே, மற்ற சமூகங்களுக்கு அ.தி.மு.க., மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது; தேர்தலில் தோற்றது.
இதில் எதையும் மறக்காத நிலையில், ராமதாசுக்கு ஆதரவாக எப்படி பழனிசாமி குரல் கொடுப்பார்?
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -