ADDED : செப் 06, 2026 03:50 AM

அயோத்தி: ஒரு பக்கம் யோகிக்கு பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம், பா.ஜ., தலைமைக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
'அயோத்தியில் கோவில் கட்டுவோம்' என்கிற கோஷத்தை முன்வைத்து, ஆட்சியைப் பிடித்த பா.ஜ., இப்போது இதே விவகாரத்தில் சிக்கித் தவிக்கிறது.
அயோத்தி ராமர் கோவிலை நிர்வகிப்பது, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை. இதன் நிர்வாகிகள், உண்டியல் திருட்டு விஷயத்தில் சரியாகச் செயல்படவில்லை என்பதால், அனைவரும் பதவி விலகினர். இதையடுத்து, இந்த அறக்கட்டளை முறையாகச் செயல்பட வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பப்பட்டார். அத்துடன், ராணுவத்திலிருந்து ஒருவர், கோவிலின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் மோடி ஆசைப்பட்டாராம்.
இதனால், நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரியான ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அறக்கட்டளையின் பொதுச்செயலர், பொருளாளர் மற்றும் அறங்காவலர்கள் என, அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், உண்டியல் திருட்டு விஷயத்தை மக்கள் மறந்துவிடுவர் என, பா.ஜ., தலைமை நினைக்கிறது. ஆனால், காங்., சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முக்கிய தேர்தல் பிரசாரமாக்க திட்டமிட்டு உள்ளன. பா.ஜ., வெற்றிக்கு காரணமான அயோத்தி ராமர், தோல்விக்கும் வழிவகுப்பாரா?
