லஞ்சம் கேட்ட அலுவலருக்கு பணம் கொடுக்க பிச்சையெடுத்து போராட்டம் நடத்திய பெண்
லஞ்சம் கேட்ட அலுவலருக்கு பணம் கொடுக்க பிச்சையெடுத்து போராட்டம் நடத்திய பெண்
ADDED : மார் 25, 2025 01:05 AM

பெரம்பலுார்: ரேஷன் கார்டு பெற்றுத்தர லஞ்சம் கேட்ட அலுவலருக்கு, லஞ்சப்பணம் கொடுக்க, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினார்.
பெரம்பலுார் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரதாப் மனைவி முத்தமிழ் செல்வி, 35, இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், முத்தமிழ் செல்வி தன் குழந்தைகளோடு மாமியார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர், கூட்டு குடும்பமாக உள்ள ரேஷன் கார்டில் இருக்கும், தங்களது பெயரினை நீக்கி, தனி குடும்பமாக புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தார். இவரது, விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.
முறையான காரணமின்றி, விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. முத்தமிழ்செல்வி அதே ஊரில் உள்ள ரேஷன் கடை சேல்ஸ்மேனிடம் இதுகுறித்து, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், பணம் எடுத்துக்கொண்டு நேரில் வர கூறியுள்ளார்.
இது குறித்து, கலெக்டர், டி.எஸ்.ஓ., ஆகியோருக்கு அவர் பதிவு தபால் புகார் அனுப்பினார். நடவடிக்கை இல்லை. விரக்தியடைந்த முத்தமிழ்செல்வி நேற்று காலை தனது உறவினர்களுடன் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்தார். ரேஷன் கார்டு பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால், அதற்கு பணம் கொடுக்க வசதி இல்லை என்று கூறி, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் கையில் தட்டேந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டவாறு பிச்சை எடுத்த அவர், கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று தரை தளத்தில் அமர்ந்து தர்ணா செய்தார். அதிகாரிகள், முத்துலட்சுமியிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, அவர் அங்கிருந்து சென்றார்.