/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் விஷம் வைத்து பறவைகள் வேட்டை
/
பாகூரில் விஷம் வைத்து பறவைகள் வேட்டை
ADDED : ஏப் 11, 2024 04:08 AM

பாகூர்,: பாகூர் பகுதியில் இரை தேடும் பறவைகள், விஷம் வைத்து வேட்டையாடப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் தற்போது நவரை பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வயலில் உள்ள பூச்சி, புழுக்களை உண்பதற்காக, கொக்கு, நாரை, மற்றும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ளன. கூடுகட்டி தங்கி இனப்பெருக்கத்தில் பறவைகள் ஈடுபட்டு வருகின்றன. வயலில் உள்ள பூச்சி மற்றும் புழுக்களை இரையாக்கி கொள்கின்றன.
இந்நிலையில், இரை தேடிவரும் பறவைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியால் வேட்டையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. துப்பாக்கி சத்தம் பறவைகள் வேட்டையை காட்டி கொடுத்து விடுவதால், தற்போது, மீன்கள், கோழி இறைச்சி கழிவுகளில் விஷம் வைத்து பறவைகள் வேட்டையாடப்பட்டு வருகிறது.
விஷம் கலந்து இரையை மாலை நேரங்களில் வயல்வெளி பகுதியில் வீசி விட்டு செல்லும் மர்ம நபர்கள், அதிகாலை நேரத்தில் அதை சாப்பிட்டு இறந்து கிடக்கும் பறவைகளை எடுத்து கொண்டு சென்று விடுகின்றனர்.
அதனை இறைச்சிக்காக, நகர பகுதியில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால், பறவைகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்வதால், வயலில் பூச்சிகள் அதிகரித்து மகசூல் பாதிக்கூடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை பறவைகள் வேட்டையில் ஈடுபட்ட நபர்களை, விவசாயிகள் தட்டி கேட்டுள்ளனர். அவர்களுக்கு மிரட்டல் விடுத்து, பறவைகளை பிடுங்கி சென்றுள்ளனர்.
இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில்''பறவைகள் வேட்டையாடப்படுவது என்பது சாதாரண விஷயம் போல் மாறி விட்டது. பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை தடுப்பதில் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பறவைகள் வேட்டை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விஷம் வைத்துக் கொள்ளப்படும் பறவைகளை, வாங்கி சாப்பிடுவதால், உயிருக்கே பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலீசாரும், வனத்துறையும் பறவைகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

