காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 18 மாணவ, மாணவியர் ‘அட்மிட்’
காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 18 மாணவ, மாணவியர் ‘அட்மிட்’
ADDED : ஜூலை 03, 2026 07:52 PM
செஞ்சி: செஞ்சி அரசு பள்ளியில் காலாவதியான சாக்லெட் சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சக்கராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பில் 34 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று இதே வகுப்பில் படிக்கும் மாணவி தனது பிறந்த நாளை முன்னிட்டு உடன் படிக்கும் மாணவர்களுக்கு சாக்லெட் வழங்கினார்.
சாக்லெட் சாப்பிட்ட 9 மாணவர்கள், 9 மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வயிற்றுவலி ஏற்பட்டது. மாணவர்கள் வலியால் அழத்துவங்கினர். சந்தேகமடைந்த ஆசிரியர்கள் மாணவி கொடுத்த சாக்லெட் பாக்கெட்டை ஆய்வு செய்தனர். அதில் சாக்லெட் ஒரு ஆண்டுக்கு முன் காலாவதியானது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 18 மாணவ, மாணவியர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள, திரண்டதால் பரபரப்பு நிலவியது.
மருத்துவ அலுவலர் பாலகோபால் தலைமையிலான டாக்டர்கள் மாணவர்களுக்கு சிகிச்சையளித்தனர். 2 மணி நேர சிகிச்சைக்குப்பின் மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திருப்பினர். இருந்த போதும் நேற்று மாலை வரை மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன், பி.டி.ஓ., மணிமாறன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர்களை பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் மணி மாணவி சாக்லெட் வாங்கிய பெட்டிக் கடையில் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைத்தார்.
