ADDED : மே 29, 2026 06:51 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் மொபட்டில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காட்டேரிக்குப்பம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டி.வி.எஸ்., என்டோர்க் மொபட்டில் (பி.ஓய் 05 விஜி 8203) வந்த வாலிபர்கள், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களை விரட்டி பிடித்து போலீசார், பைக்கை சோதனை செய்தனர். அதில், 95 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், காட்டேரிக்குப்பம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இளவழையன் மகன் போஸ், 21; துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு கவுரிஸ் மகன் பிலோமின்தாஸ், 25; என்பதும், இருவரும் கூலி வேலை செய்துகொண்டு, கஞ்சா கடத்தி வந்து விற்பதும் தெரியவந்தது.
இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 95 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக், 2 மொபைல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் நேற்று அடைத்தனர்.
