ADDED : ஜூலை 14, 2024 06:09 AM

வானுார் : வானுார் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பெண்கள் இறந்தனர். மின்வாரிய ஊழியர்களின் அலட்சயத்தால் இறந்ததாகக்கூறி அப்பகுதியினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த புளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் சாலையையொட்டியுள்ள தனது நிலத்தில் சவுக்கை சாகுபடி செய்துள்ளார். நிலத்தில் கால்நடைகள் புகுவதை தடுக்க சுற்றி கம்பி வேளி அமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றுடன் பெய்த கனமழையில், சேகர் நிலத்தின் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, கம்பி வேலி மீது விழுந்து, மின்சாரம் துண்டித்துள்ளது.
நேற்று மதியம், புளிச்சப்பள்ளம் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி வீரம்மாள்,50; அவரது நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தார். பிற்பகல் 3;30 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த முத்து மனைவி சத்தியவாணி, 60; மாடுகளுக்கு புல் அறுக்க சென்றார்.
அப்போது, திடீரென மின்சாரம் வந்ததோடு, அறுந்து கிடந்த மின் கம்பி மூலம் சேகர் வயலில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி முழுவதுமாக மின்சாரம் பாய்ந்தது. இந்த வேலியை பிடித்த சத்தியவாணி மீது மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்ட வீரம்மாள், ஓடிச் சென்று சத்தியவாணியை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த வானுார் போலீசார் விரைந்து சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
அப்போது அங்கு கூடிய பொதுமக்கள், நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய மழையால், மின்கம்பி அறுந்துள்ளது. இது குறித்து மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது யாரும் அழைப்பை எடுக்கவில்லை. அலட்சியமாக இருந்தது மட்டுமல்லாமல் சீரமைக்காமல் மின் இணைப்பு வழங்கியதால், இருவரும் இறந்துள்ளனர்.
இறந்த 2 பெண்களின் குடும்பத்திற்கும் மின் வாரியத்தின் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து, இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
