ADDED : ஜூலை 08, 2026 05:51 PM
பண்ருட்டி: பண்ருட்டியில், வீட்டின் கதவை உடைத்து 22 சவரன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி, வி.எம்.எஸ்.நகர், 2 வது தெருவை சேர்ந்தவர் தாவூத், 40; இவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பைரோஸ்பானு, 38; நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பைரோஸ்பானு கடந்த 3ம் தேதி பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.
பிரசவம் முடிந்து நேற்று முன்தினம் இரவு 9 :00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து, 22 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய், கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து சம்பவ இடத்தில், பண்ருட்டி டி.எஸ்.பி., ரகுபதி, பாஸ்கர் விசாரணை நடத்தினர். தொடந்து கடலுாரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். இரு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
