ADDED : ஜூலை 09, 2024 05:01 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 23 ஐம்பொன் சுவாமி சிலைகள் திருடிய நரிக்குறவர்கள் மூவரை போலீசார் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர், 17 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன், 69; வீட்டின் ஒரு பகுதியில் பட்டறை அமைத்து, ஐம்பொன் சுவாமி சிலை செய்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2ம் தேதி, பிரான்ஸ் நாட்டில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்ய தயார் செய்து வைத்திருந்த 50 கிலோ எடை அம்மன் சிலை, 8 கிலோ எடை பித்தளை சிலை மாயமானது.
புகாரின் பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப் இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிவசங்கரன் தனது வீட்டில் செய்து வைத்திருந்த ஏராளமான சிலைகளில் மேலும், 21 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த அலெக்ஸ், 21; சிவசங்கரன் வீட்டின் அருகே அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. அதன்பேரில், அலெக்ஸை பிடித்து விசாரித்தபோது, தனது நண்பர்களான நரிக்குறவர் காலனி முத்துப்பாண்டி,24; மருதுபாண்டி, 25; ராகவா, 23; ஆகியோருடன் சேர்ந்து சிலைகளை திருடியதும், சிலைகளை வாங்க யாரும் முன் வராததால், அவற்றை அறுத்து உருக்கி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
அலெக்ஸ் அளித்த தகவலின்பேரில், நரிக்குறவர் காலனியில் உள்ள புதரில் பதுக்கி வைத்திருந்த 23 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, அலெக்ஸ், முத்துப்பாண்டி, ராகவா ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.