/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
26 வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் ஏற்பு
/
26 வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் ஏற்பு
ADDED : ஜூலை 01, 2024 06:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் ஏற்கப்பட்டது.
புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏப்., 19ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்தது. ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் இறுதி செய்யப்பட்ட தேர்தல் செலவினங்களை முறையாக பராமரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள் முகமது மன்சூருல் ஹசன் மற்றும் லட்சுமி காந்தா ஆகியோர் இறுதி முறையாக புதுச்சேரி தொகுதிக்கு வந்தனர். இதையடுத்து, வேட்பாளர்கள் தங்களது இறுதி தேர்தல் செலவின கணக்குகள் சரிபார்ப்பு கூட்டம் தேர்தல் நடத்தும் மாவட்ட அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.
கருத்தரங்க கூடத்தில் நடந்த கூட்டத்தில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து வேட்பாளர்களும் அன்றாட கணக்குப் பதிவேடு, அட்டவணைகள் (1-11), பகுதி (1-1V), வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், உறுதிமொழி பத்திரம் மற்றும் செலவின அசல் ரசீதுகள் ஆகிய தேர்தல் செலவின கணக்குகளை, தேர்தல் துறையால் அமைக்கப்பட்ட தேர்தல் செலவின கண்காணிப்புக் குழு பராமரித்து வரும் செலவின நிழற்பதிவேட்டின் கணக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, 26 வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியின் ஆய்வறிக்கையின்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.