ADDED : ஜூன் 20, 2026 07:22 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாகூரை சேர்ந்த பெண் ஒருவரை, மொபைல் மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் கிரெடிட் கார்டு செயலாக்கம் குறித்து, விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சை உண்மையென நம்பிய பெண் தனது கிரெடிட் கார்டு விவரங்களை மர்ம நபருக்கு பகிர்ந்தார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து 46 ஆயிரத்து 640 ரூபாய் மாயமாகியது. பின் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.
இதேபோல், தவளங்குப்பத்தை சேர்ந்த நபர் 10 ஆயிரம், நெட்டப்பாக்கம் நபர் 3 ஆயிரத்து 500, என 3 பேர் மொத்தம் 60 ஆயிரத்து 140 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
