/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
/
புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
ADDED : மே 21, 2024 05:09 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் 6 பேரிடம் ரூ. 1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்துள்ளது.
லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் காமராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனில் பேசிய மர்ம நபர், மும்பை போலீஸ் அதிகாரி என கூறி, உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக போதை பொருட்கள் கொண்ட பார்சல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் உங்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பயந்துபோன காமராஜ், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 56 ஆயிரம் பணத்தை செலுத்தினார். விசாரணையில் மர்ம நபர் போலீஸ் அதிகாரி என கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுபோல், லாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம். ஆன்லைன் விளையாட்டு மொபைல் அப்ளிகேஷனில் ரூ. 40 ஆயிரம் செலுத்தி பணத்தை இழந்தார்.
ரெட்டியார்பாளையம் ராம்குமாரிடம் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய எண் பெற்று ரூ. 6600 திருடி உள்ளனர். கீழூர் முருகன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1000 பணம் திருடப்பட்டது.
சண்முகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மொபைல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசியபோது, எதிர்முனையில் பெண் ஒருவர் நிர்வாணமாக தோன்றினார். அடுத்த சில நொடியில் வீடியோ கால் கட் ஆகிவிட்டது. சில மணி நேரத்தில் அந்த வீடியோவை காண்பித்து மர்ம கும்பல் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேரிடம் மொத்தம் ரூ. 1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளது. இது குறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

