ADDED : ஜூலை 28, 2026 04:00 PM
பாகூர்: அகில இந்திய விவசாய சங்கத்தின், 15வது பாகூர் வட்ட மாநாடு குருவிநத்தம் கிராமத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு, தலைவர் துரை சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். ராமசாமி வரவேற்றார். சதாசிவம் அஞ்சலி தீர்மாணம் வாசித்தார். விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் முருகையன் வேலை அறிக்கை வாசித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ், மா. கம்யூ., செயலாளர் சரவணன், மாதர் சங்க நிர்வாகி சிவகாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார். விவசாய சங்க மாநில துணைத் தலைவர் சீனு பத்மநாபன் நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். வெங்கடாசலம் நன்றி கூறினார்.
இம்மாநாட்டில், பருவமழைக்கு முன்பாக அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரிட வேண்டும். பழுதான சொர்ணாவூர் அணைக்கட்டை புதுப்பித்து, பாகூர் ஏரிக்கு நீர்வரத்தை உறுதி செய்திட வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாய நிலங்களில் வேலைக்கு பயன்படுத்திட வேண்டும். குருவிநத்தம் சித்தேரி முதல் கொமந்தான்மேடு வரை தென்பெண்ணை நதிக்கரையை பலப்படுத்தி வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாத்திட வேண்டும்.
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
