புதுச்சேரி சட்டசபையில் 24ம் தேதி முதல்வர் பட்ஜெட் தாக்கல்:ரூ.14,300 கோடிக்கு ஒப்புபெற அனுப்பிவைப்பு, புதிய திட்டங்கள் குறித்து எகிறும் எதிர்பார்ப்பு
புதுச்சேரி சட்டசபையில் 24ம் தேதி முதல்வர் பட்ஜெட் தாக்கல்:ரூ.14,300 கோடிக்கு ஒப்புபெற அனுப்பிவைப்பு, புதிய திட்டங்கள் குறித்து எகிறும் எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 06, 2026 08:17 PM
ADDED : ஆக 06, 2026 08:03 PM

புதுச்சேரி: அமைச்சர்களுக்கான இலாகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, வரும் 24-ம் தேதி 14,100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, பல்வேறு நிர்வாகச் சூழல்கள் காரணமாக புதுச்சேரி அரசால் முழுமையான பட்ஜெட்டை உடனடியாகத் தாக்கல் செய்ய இயலாத நிலை உருவானது. இதன் காரணமாக, மாநில அரசின் அன்றாடச் செலவினங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தடையின்றித் தொடர்வதற்காக, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்திற்குப் பொறுந்தக்கூடிய ரூ. 5,396 கோடி மதிப்பிலான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்து அமல்படுத்தியது.
தற்போது இந்த இடைக்கால பட்ஜெட்டின் காலக்கெடு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், எஞ்சிய காலத்திற்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, புதுச்சேரி அரசு சார்பில் ரூ. 14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட் வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் முன்மொழிவைப் பரிசீலித்த மத்திய அரசும், அந்த பட்ஜெட் மதிப்பீட்டிற்கு முறைப்படி தனது ஒப்புதலை அளித்தது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தபோதிலும், புதுச்சேரி அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்குவதில் சில கருத்து வேறுபாடுகளும் இழுபறிகளும் நீடித்து வந்தன. இதன் காரணமாகவே பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது இந்த இலாகா விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான தடைகள் அனைத்தும் முழுமையாக விலகியுள்ளன.
மேலும், தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆடி மாதத்தில் முக்கிய அரசு நிகழ்வுகளையோ அல்லது புதிய தொடக்கங்களையோ தவிர்க்கும் வழக்கம் உள்ளது. வரும் 17-ம் தேதியுடன் ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி மாதம் பிறப்பைக் கருத்தில் கொண்டு, சுபமான ஆவணி மாதத்தில், அதாவது வரும் 24-ம் தேதியை பட்ஜெட் தாக்கலுக்கு உகந்த நாளாக முதல்வர் தேர்ந்தெடுத்துள்ளார்.
திட்டமிட்டபடி அன்றைய தினம் காலை 9 மணியளவில் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முறைப்படி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலையில் நிதித்துறையைத் தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி, மாநிலத்தின் முழுமையான வரவு-செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய உள்ளார்.
அதற்கு முன்னதாக சபாநாயகர் தேர்வும் இறுதி செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரைச் சீராக நடத்துவதற்கும், துறை சார்ந்த விவாதங்களை மேற்கொள்வதற்கும் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் சட்டசபை செயலகப் பணிகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன.
எகிறிய எதிர்பார்ப்பு முதல்வர் ரங்கசாமி எப்போதும் வரியில்லாத பட்ஜெட்டினை தாக்கல் செய்வது வழக்கம். மக்கள் மீது வரியை சுமத்துவது இல்லை. இந்த முறையும் இது தொடருகிறது.
இதேபோல் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் முதியோர்கள், மீனவர்கள், மாணவர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் புதிய திட்டங்களையும் முதல்வர் ரங்கசாமி தாராளமாக வாரி வழங்குவார். குறிப்பாக, முதியோர் பென்ஷனை ஆட்சி பொறுப்பேற்று மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது உயர்த்தி கொடுப்பது வழக்கம். எனவே முதல்வரின் பட்ஜெட்டில் இடம் பெற உள்ள புதிய திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினர்களிடமும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
