ADDED : ஜூலை 28, 2026 05:11 PM
புதுச்சேரியின் பல்லுயிர் சூழலை பதிவு செய்ய... கிராமம்–நகரங்களை முழுவதுமாக அலச முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் நகரம், கிராமங்களில் காணப்படும் பல்லுயிர் பெருக்கத்தை பதிவும் செய்யும் பணி முழு வீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊரு பிரண்டையும், கீழாநெல்லியும் நமக்கு சாதாரணச் செடி. ஆனா, வெளிநாட்டு காரனுக்கு அது பல கோடி பிசினஸ் - இது சாதாரணமாகச் சொல்லப்படும் வார்த்தையாக இருந்தாலும், இதில் உண்மையும் இருக்கின்றது. நமது தாத்தாக்களும் பாட்டிகளும் வழிவழியாகக் கற்று வைத்திருக்கும் மூலிகை ரகசியங்கள், நாட்டுப்புற விவசாய முறைகள், ஏரிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் அரிதான உயிரினங்கள். இவற்றை வெளிநாட்டு நிறுவனங்களோ அல்லது கார்ப்பரேட்களோ திருடிச் சென்று காப்புரிமை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ கேடயம்தான் மக்கள் பல்லுயிர் பதிவேடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் 2002 மற்றும் 2023 திருத்தங்களின்படி, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் இந்த பதிவேட்டைத் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வனத்துறை இயக்ககத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி பல்லுயிர் பேரவை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் இந்த பல்லுயிர் பதிவேடுகளை தயாரிப்பதற்கான பணிகளை தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி விரைவில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், மீன் வளங்கள் மற்றும் ஏரிச் சூழல்களை நேரில் சென்று ஆவணப்படுத்தப்பட உள்ளது. மேலும், உள்ளூர் மக்களிடம் பேசிக் கேட்டறிந்து, வழிவழியாகச் சொல்லப்படும் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் மற்றும் இயற்கை வளப் பயன்பாட்டைப் பதிவு செய்யப்பட உள்ளது.
இதனை கிராம பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மக்களுக்கான பதிவேட்டை இறுதி செய்ய வேண்டும். சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி டிஜிட்டல் ஆவணமாக மாற்ற வேண்டும். நமது பாரம்பரிய அறிவையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதில் புதுச்சேரி அரசு எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்று இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளர்.
இது வெறும் காகித அளவிலான அறிக்கையாக இல்லாமல், உண்மையான களப்பணியாளர்கள் மூலம் கிராமப்புற மக்களின் பங்களிப்போடு இந்த பதிவேடு தயாரிக்கப்பட உள்ளதால் அது புதுச்சேரியின் எதிர்காலச் சூழலியல் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலமாக அமைய உள்ளது குறிப்பிடதக்கது.
