ADDED : மே 24, 2024 04:15 AM
பாகூர்: கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பார் ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்,64; இவர் அங்குள்ள தனியார் மது பாரில் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 16ம் தேதி இரவு வேலை அசதியில் சோர்வடைந்து மதுபான கடை வளாகத்திற்குள் ஓரமாக படுத்து துாங்கி உள்ளார்.
அப்போது, அங்கு நின்றிருந்த மகேந்திரா கார் ஒன்று திடீரென வேகமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஓட்டுனர் கவனிக்காத நிலையில், அங்கு ஓரமாக படுத்திருந்த விஸ்வநாதன் மீது கார் மோதியது.
இதில், வலது கை மற்றும் விலா பகுதியில் பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புகாரின் பேரில், கார் டிரைவர் பண்ருட்டி கீழிருப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.