பா.ஜ., என்னை கைவிடாது ஜான்குமார் எம்.எல்.ஏ., பேட்டி
பா.ஜ., என்னை கைவிடாது ஜான்குமார் எம்.எல்.ஏ., பேட்டி
ADDED : ஜூன் 05, 2026 10:54 PM
புதுச்சேரி: அரசியலில் அனுபவமுள்ள எனக்கு பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பா.ஜ.,வை சேர்ந்த ஜான்குமார் எம்.எல்.ஏ., கூறினார்.
இதுகுறித்து அவர், ‘தினமலர்’ நிருபரிடம் கூறியதாவது;
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பா.ஜ.,வில் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் தனி அமைப்பு துவங்க போவதாக கூறியதும் அவருடன் ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்தும் அவருடன் செல்ல பலர் ஆயத்தமாகி வருகின்றனர்.
புதுச்சேரி அமைச்சரவையில், ஜோஸ் சார்லசிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அவருக்கு கிடைக்கவில்லை என்றால், அந்த பதவி எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால் சபாநாயகர் பதவி கொடுப்பார்கள் என்று சொன்னார்கள். எது கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். எது கொடுத்தாலும் தப்பில்லை. அது தான் சீனியாரிட்டி.
நான் 4 வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். நமச்சிவாயம் 6வது முறை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்றால் அது நியாயம். மேலும், பா.ஜ.,வே கதி என்று உள்ளோம். என்றைக்கும் இந்த பா.ஜ., துண்டை கழற்றியது கிடையாது. அந்தளவிற்கு நானும், என் மகனும் கட்சிக்கு விசுவாசமாக உள்ளோம்.
ராஜசேகரும், மீனாட்சிசுந்தரமும் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளனர். அதனால், அனுபவமுள்ள எனக்கு பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., என்றைக்கும் என்னை கைவிடாது’ என்றார்.
