ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
அரியாங்குப்பம்: கடலில் அலையில் சிக்கி மாயமான கல்லுாரி மாணவரின் உடலை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
புதுச்சேரி அடுத்த கரியமாணிக்கம் அருகில் உள்ள ஏரிப்பாக்கம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர் மகன் பேரரசு,19. இவர் தவளக்குப்பம் அரசு கல்லுாரியில் பி.சி.ஏ., இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரியில் இருந்து இரண்டு நண்பர்களுடன் நேற்று முன்தினம் மதியம் தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கடலில் குளித்தார். அப்போது, பேரரசு ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
தகவலறிந்த கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் கடலோர போலீசார் மாணவரை நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று காலையில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், வம்பாகீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே 3 கிலோ மீட்டர் (கடல்) தொலைவில் மாயமான பேரரசு உடல் நேற்று மதியம் 3:30 மணியளவில் மிதந்தது. கடலோர காவல்படையினர் மாணவரின் உடலை மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் கடலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
