ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு: புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு: புதுச்சேரியில் திடீர் பரபரப்பு
UPDATED : ஆக 05, 2026 08:50 PM
ADDED : ஆக 05, 2026 08:11 PM

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு, வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில், வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனியர் எஸ்.பி., நித்யா உத்தரவின் பேரில், எஸ்.பி., நல்லாம்பாபு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கணேசன், சண்முகசுந்தரம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்ராவ் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகம், சுகாதாரத் துறை, தீயணைப்பு துறையினர், ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினரும் அங்கு வந்தனர். போலீசார் அங்கிருந்த இருக்கைகள், குப்பை தொட்டிகள், பிளாட்பாரங்கில் சோதனை செய்தனர. அதில், முதலாவது பிளாட்பாரத்தில், சந்தேகத்திற்கு இடமான வகையில் கேட்பாரற்று, சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
வெடிகுண்டடை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் ராமு, பாபி வரவழைக்கப்பட்டும், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ததில், அதில், வெடிகுண்டு இருப்பது உறுதியானது. அதையடுத்து, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போலீசார் மூலமாக அங்கிருந்த ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அந்த சூட்கேஸ் அங்கிருந்து 70 மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களால், வெடிக்க வைக்கப்பட்டது. சூட்கேசில் இருந்த வெடி பொருள் வெடித்தில் பயங்கர சத்தம் 100 மீட்டர் துாரம் வரை கேட்டது.
திடீர் வெடி சத்தத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், விசாரணையில், மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகையையொட்டி, நடந்த ஒத்திகை என தெரிந்து, பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
