/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜே.சி.பி.,யால் அப்பளமாக நொறுக்கப்பட்ட கார் சிதம்பரத்தில் பரபரப்பு
/
ஜே.சி.பி.,யால் அப்பளமாக நொறுக்கப்பட்ட கார் சிதம்பரத்தில் பரபரப்பு
ஜே.சி.பி.,யால் அப்பளமாக நொறுக்கப்பட்ட கார் சிதம்பரத்தில் பரபரப்பு
ஜே.சி.பி.,யால் அப்பளமாக நொறுக்கப்பட்ட கார் சிதம்பரத்தில் பரபரப்பு
ADDED : பிப் 15, 2025 05:16 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குடிபோதையில் ஜே.சி.பி., இயந்திரத்தால் காரை நசுக்கி சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது வீட்டு முன்பு, தனது ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தார். இவரது வீடு அருகே பார் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவு கூடுவெளி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் லோகேஸ்வரன், சிதம்பரம் கொத்தங்குடி தெரு பிரவீன், வல்லரசு, 23; அம்பேத்கர் நகர் சார்லஸ், 25; சடகோபன் நகர் சரண்ராஜ் ஆகிய 6 பேர், மதுக்குடிக்க வந்தனர்.
காரை ராஜா வீட்டு முன்பு நிறுத்தினர். இதனை, ஜே.சி.பி., கிளீனரான ஜெயங்கொண்டப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன்,27; ஓரமாக காரை நிறுத்தும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், மகேந்திரனை தாக்கினர். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த ராஜா மற்றும் குடும்பத்தினரையும் தாக்கினர். அவ்வழியாக வந்த கோவிந்தசாமி தெருவை சேர்ந்த அருள்பாண்டியன் என்பவரையும் தாக்கினர்.
போதை ஆசாமிகள் எல்லை மீறியதால் ஆத்திரமடைந்த, ஜே.சி.பி., டிரைவர் கீழமூங்கிலடியை சேர்ந்த விக்னேஷ், 25; ஜே.சி.பி.,யை இயக்கி அருகில் நின்ற போதை ஆசாமிகளின் காரை நசுக்கி சேதப்படுத்தினார். இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அதிர்ச்சியடைந்த போதை கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மகேந்திரன், அருள்பாண்டியன் ஆகியோர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மகேந்திரன், ஜெய் ஆகாஷ் ஆகியோர் சிதம்பரம் நகர போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து இருதரப்பிலும் சேர்ந்த வல்லரசு, சார்லஸ், சரண்ராஜ், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

