ADDED : ஜூலை 15, 2026 07:31 PM
புதுச்சேரி: உருளையன்பேட்டையில் யார் பெரியவர் என்ற முன்விரோதத்தில் ரவுடியின் நண்பரான மற்றொரு ரவுடியை மண்வெட்டியால் தாக்கிய கொலை செய்ய முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உருளையன்பேட்டை, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் அருண் மரியநாதன், 36; ரவுடியான இவர் புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் 18 அடிதடி வழக்குகள் உள்ளது. மேலும், இவர் மற்றும் இவரது நண்பர் ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ரகு மீது ஆந்திராவில் நடந்த ராக்கி ரமேஷ் கொலை வழக்கும் உள்ளன.
இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு அருண் மரியநாதனுக்கு ஏற்பட்ட சாலை விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இவரது நண்பரான ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ரகுவிற்கும், கோவிந்தசாலையை சேர்ந்த சோனி, கென்னடி நகரை சேர்ந்த நாகராஜ் இடையே ரவுடிகளில் யார் பெரியவர் என்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அருண் மரியநாதன், ரகுவின் நண்பர் என்பதால், நேற்று முன்தினம் சோனி, நாகராஜ், தட்டாஞ்சாவடியை சேர்ந்த இலால் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து, தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த மண்வெட்டி, சுத்தி மற்றும் மரக்கட்டை ஆகியவற்றால் அருண் மரியநாதனை கடுமையாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில், படுகாயமடைந்த அருண் மரியநாதனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அருண் மரியநாதன் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் சோனி, நாகராஜ், இலால் ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
