பதக்கம் குவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு... ரொக்கப் பரிசு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.50 லட்சம் ;புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வெளியீடு
பதக்கம் குவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு... ரொக்கப் பரிசு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.50 லட்சம் ;புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வெளியீடு
UPDATED : ஜூலை 24, 2026 05:35 AM
ADDED : ஜூலை 23, 2026 05:02 PM

புதுச்சேரி: தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து நாட்டுக்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ரொக்க ஊக்கத்தொகையை உயர்த்தி, புதுச்சேரி அரசு புதிய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அரசாணையானது, இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தவும், உண்மையான திறமையாளர்களை ஊக்கப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்:: விளையாட்டு வீரர்களின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கும் வகையில் சர்வதேசப் போட்டிகளுக்கான பரிசுத் தொகைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. உலக அரங்கின் உச்ச போட்டியான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சம், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சம், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஆசியா தங்கத்திற்கு...: இதேபோல், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ. 20 லட்சம், வெள்ளி வென்றால் ரூ. 15 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ. 10 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தொடர்களில் இதே அளவிலும், மற்ற கால இடைவெளிகளில் அதற்கு ஏற்பவும் பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில்..: தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைப்போரை கவுரவிக்கும் விதமாக, தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மூத்தோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1.50 லட்சம், வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம், வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ. 75 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ. 1 லட்சம், தென் மண்டலப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ. 20 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
பங்கேற்பிற்கு...: வெற்றி பெறுவோருக்கு மட்டும் பரிசுகள் வழங்குவதோடு நின்றுவிடாமல், இந்தியாவின் பிரதிநிதிகளாக ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குப் பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும் கூட பங்கேற்பு ஊக்கத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்போருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கப்படுவது விளையாட்டு வீரர்களுக்குப் பெரும் ஆறுதலாகவும் உற்சாகமாகவும் அமைந்துள்ளது.
பயிற்சியாளர்கள்:: வீரர்களின் வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் உழைக்கும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களை உருவாக்கும் தகுதியான பயிற்சியாளர்களுக்கு, வீரர்களுக்குரிய ஊக்கத்தொகையில் பாதியாகிய 50 சதவீதம் தொகையை ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பயிற்சியாளர்கள் இருந்தால் அந்தத் தொகை சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.
எல்லாமே நேரடி தான்...: இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள், போட்டிகள் நிறைவடைந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் உரிய ஆவணங்களுடன் விளையாட்டு துறையிடம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை எவ்வித தாமதமின்றி நேரடியாக வீரர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலமாக வரவு வைக்கப்படும்.
எச்சரிக்கை:: பொய்யான அல்லது போலியான சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. புதுச்சேரி அரசின் இந்தச் அறிவிப்பு இளம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
