ADDED : செப் 07, 2026 11:14 PM
தினமலர் செய்தி எதிரொலி
புதுச்சேரி: புதுச்சேரி பி.ஆர்.டி.சி., பஸ்களில் கவர்னர் படம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தினமலர் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக தற்போது முதல்வர் ரங்கசாமியின் படமும் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் இயங்கி வரும் பி.ஆர்.டி.சி. பஸ்களில் கவர்னர், முதல்வர் புகைப்படங்கள் ஒட்டப்படுவது வழக்கம். அண்மையில் பி.ஆர்.டி.சி., பஸ்களில் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் முதல்வர் படம் புறக்கணிக்கப்பட்டது, ஆளும் என்.ஆர்.காங்., கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. யூனியன் பிரதேசத்தில் நிர்வாகத் தலைவராக கவர்னர் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அதன் தலைவரான முதல்வரின் படத்தை விடுத்து, கவர்னரின் படத்தை மட்டுமே இடம்பெறச் செய்தது எந்த விதத்தில் நியாயம்? என்று என்.ஆர்.காங்., தொண்டர்களும் நிர்வாகிகளும் கேள்வி எழுப்பினர். இது குறித்து கடந்த 31-ம் தேதி தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. அதன்படி, பி.ஆர்.டி.சி., ஏற்கனவே இருந்த கவர்னரின் படத்திற்கு அருகிலேயே, முதல்வர் ரங்கசாமியின் படத்தையும் ஸ்டிக்கராக ஒட்டி பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளனர்.
தொண்டர்கள் வரவேற்பு
நிர்வாகத்தின் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி தீர்வுக்கு வழிகோலிய தினமலர் நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த பி.ஆர்.டி.சி. நிர்வாகத்திற்கும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் நன்றியையும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
