ADDED : செப் 04, 2024 03:26 AM
நெட்டப்பாக்கம் : ரசாயனம் பூசிய விநாயகர் சிலையை பயன்படுத்த கூடாது என நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 11 கிராமங்களில் வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதையொட்டி, கொம்யூன் கிராம எல்லைகளில் விநாயகர் சிலைகள் செய்பவர்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து விழா நடத்துபவர்கள் கொம்யூன் பஞ்சாயத்தில் அனுமதி பெற வேண்டும்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல், தற்காலிகமாக சிலை அமைத்து வழிபட வேண்டும். விழா முடிந்ததும் சிலையினை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா நடத்தும் இடத்தில் ஒலி பெருக்கிகள் அமைக்க நேரிட்டால், போலீசில் முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
களி மண்ணால் ஆன சிலையினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் பூசிய சிலையை பயன்படுத்த கூடாது. எனவே, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுசூழல் துறை வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.
