/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிப்டோ கரன்சி மோசடி நடிகையருக்கு புது சிக்கல்
/
கிரிப்டோ கரன்சி மோசடி நடிகையருக்கு புது சிக்கல்
ADDED : பிப் 28, 2025 01:28 AM

புதுச்சேரி:கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகையர் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன், 70; இவர், கிரிப்டோ கரன்சியில் ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில், 98 லட்சம் முதலீடு செய்து, ஏமாந்தார்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை சேர்ந்த கோவை நித்தீஷ்குமார் ஜெயின், 36, அரவிந்த்குமார், 40, ஆகியோரை சிறையில் அடைத்தனர். மேலும், ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில், பிரபல நடிகையர் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளார்.
போலீசார் கூறியதாவது:
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மகாபலிபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில், மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிகப்பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர். இதில், சினிமா நடிகையர் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.
நடிகையருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்புள்ளதா என, பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இதனால், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.