/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாமில் குடிநீர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
/
ஏனாமில் குடிநீர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : மே 26, 2024 05:16 AM

புதுச்சேரி: ஏனாம் நலா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது. இங்குள்ள பொதுப்பணித்துறையின் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நலா குளத்திற்கு, ராஜமுந்திரி பகுதியில் இருந்து கால்வாய் வழியாக கோதாவரி ஆற்று தண்ணீர் வருகிறது. குளத்திற்கு வரும் நீர் பொதுப்பணித்துறை மூலம் சுத்திகரித்து குடிநீராக வினியோகம் செய்கின்றனர்.
ஏனாமில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன், வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக ஏனாமில் குளிர்ந்த காற்று வீசியதுடன், விட்டு விட்டு லேசாக மழை பெய்தது.
திடீரென சீதோஷண நிலை மாறியதால், நலா குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் நேற்று காலை செத்து மிதந்தது. மீன்கள் இறப்பால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அறிந்த பொதுப்பணித்துறையினர், உள்ளூர் மீனவர்கள் மூலம் மீன்களை அகற்றினர். மீன்கள் இறப்பிற்கான காரணம் அறிய குளத்தின் தண்ணீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.