ADDED : ஜூன் 24, 2026 09:42 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்த மூதாட்டியின் கண்கள் மற்றும் உடல் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கிருஷ்ணவேணி, 75; உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவர், தனது மறைவிற்கு பின் கண்கள் மற்றும் உடலை புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்க வேண்டுமென எழுதி வைத்திருந்தார்.
அதன்படி, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மகன்கள் பரமானந்தம், சவுரிராஜகுப்தா, மருமகள்கள் விஜயலட்சுமி, சித்ரா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கிருஷ்ணவேணியின் கண்கள் மற்றும் உடலை அன்று மாலை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினர்.
இதில், சிட்டுக்குருவி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அருண், பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் கண், ரத்தம் மற்றும் உடல் உறுப்பு தான ஆலோசகர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கிருஷ்ணவேணியின் உடலுக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
