/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடராஜர் கோவிலில் மகாபிஷேகம் சிதம்பரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
/
நடராஜர் கோவிலில் மகாபிஷேகம் சிதம்பரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
நடராஜர் கோவிலில் மகாபிஷேகம் சிதம்பரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
நடராஜர் கோவிலில் மகாபிஷேகம் சிதம்பரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : மே 02, 2024 12:33 AM
சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு நடைபெற்ற மகாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவர் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஆண்டிற்கு 6 முறை என சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகாபிஷேகம் நடக்கிறது.
ஆனி திருமஞ்சன தரிசனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது, ஆயிரங்கால் மண்டப முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் மகாபிஷேகம் நடக்கிறது. மற்ற 4 மாதங்களில் கோவில் சித்சபை முன்புள்ள கனகசபையில் நடக்கிறது.
அதன்படி, சித்திரை மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை கோவில் கிழக்கு கோபுர வாயில் அருகே ஸ்ரீ சபையில் கலசங்கள் வைத்து அதிருத்ர ஜெபம் நடந்தது. தொடர்ந்து, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனை, கடஸ்தாபனம், மஹா ருத்ர ஜபம், மஹா தீபாராதனை நடந்தது.
மதியம், ஸ்ரீ ருத்ர ஹோமம், வஸோத்தாரா ஹோமம், அதிருத்ர மஹா பூர்ணாஹுதி, வடுக பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, தச தானங்கள், கடயாத்ராதானம் மஹா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் எழுந்தருள செய்யப்பட்டு, இரவு 7:30 மணிக்கு மகாபிஷேகம் துவங்கியது. விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 11:30 மணி வரை நடைபெற்ற அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

