அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 21, 2026 08:11 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள பிரிவுகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் ஐ.டி.ஐ. மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டு, சேர்க்கை முடிவடைந்து, காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
அதன்படி, மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.,யில் பிட்டர், எலக்டரிசியன், ஏசி டெக்னீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், ஒயர்மேன், வெல்டர், கட்டடம் கட்டுபவர், மின்சார வாகன மெக்கானிக், பிளாஸ்டிக் செயல்முறை இயக்குபவர் மற்றும் ட்ரோன் டெக்னீசியன் போன்ற பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறிய, 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேரடியாக ஐ.டி.ஐ., முதல்வரை சந்தித்து உடனடி சேர்க்கை பெறலாம்.
இதேபோல், வம்பாகீரப்பாளையம் பெண்கள், வில்லியனுார், பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கையும் நடந்து வருகிறது. ஆகவே, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அந்தந்த ஐ.டி.ஐ.,களின் முதல்வரை நேரில் சந்தித்து உடனடி சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம்.
காலியாக உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு மட்டும் சேர்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்படும். இந்த உடனடி சேர்க்கை அடுத்த மாதம் 8 ம் தேதி வரை மட்டுமே நடக்கிறது. தொழிற்பயிற்சி பெரும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு மற்றும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
