ADDED : மே 14, 2024 05:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆர்வமுடன் பெற்று சென்றனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. இதையொட்டி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்கள் குவிந்து விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும், 22,ம் தேதி மாலை 4:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வரும், 24,ம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி, அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு பலகையில், காலை 9:00 மணிக்கு ஒட்டப்படும்.
வரும், 27,ம் தேதி மதிப்பெண், இட ஒதுக்கீடு முறையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு பள்ளிகளில் இடம் வழங்கப்படும். ஒவ்வொரு நாளின் இறுதியில் மீதம் உள்ள இடங்கள், ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.
வரும், 28,ம் தேதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணல் தேதி, நேரம் வெளியிடப்படும். வரும், 29ம் தேதி மதிப்பெண், இட ஒதுக்கீடு முறையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் இடம் வழங்கப்படும்.
வரும், 30ம், தேதி, 10,ம் வகுப்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணல் தேதி, நேரம் வெளியிடப்படும்.
வரும், 31,ம் தேதி மதிப்பெண், இட ஒதுக்கீடு முறையில், தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இடம் வழங்கப்படும்.
இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புகள் வரும், ஜூன்,6,ம் தேதி துவங்குகின்றன.
