கடப்பாறையால் தாக்கி இன்ஜினியர் கொலை புதுச்சேரி அருகே பயங்கரம்
கடப்பாறையால் தாக்கி இன்ஜினியர் கொலை புதுச்சேரி அருகே பயங்கரம்
ADDED : ஏப் 28, 2026 09:02 PM
பாகூர்: புதுச்சேரி அருகே வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை, கடப்பாறையால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மணப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; இன்ஜினியர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், மன அழுத்தம் காரணமாக வேலையை விட்டு விட்டு, சொந்த ஊருக்கு வந்து, மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின், புதுச்சேரி வடமங்கலத்தில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தும் அந்த வேலையை விட்டு வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் துாங்கினார். நேற்று அதிகாலை 5:00 மணியளவில், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தம்பி சேது ஓடி வந்து பார்த்தபோது மணிகண்டன் தலையில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடன் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் இறந்தார்.
தகவலறிந்த எஸ்.பி., சுப்ரமணி, பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் கிருமாம்பாக்கம் போலீசார சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
அப்போது, மணிகண்டனை, அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான வசந்தராஜா, 47; என்பவர் கடப்பாறையால் தாக்கியது தெரியவந்தது. அதன்பேரில், போலீசார் வசந்தராஜாவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் , வசந்தராஜா மனைவியுடன் மணிகண்டன் பேசி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த இரண்டு மாதமாக, மனைவியுடன் பிரிந்து வசந்தராஜா தனியாக வசித்து வந்துள்ளார். தனது இந்த நிலைக்கு மணிகண்டன்தான் காரணம் என்பதால் அவரை கொலை செய்ய செய்திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், சில தினங்களுக்கு முன், மணிகண்டணின் பைக்கை வசந்தராஜா திருடிச் சென்று அடமானம் வைத்து, மது குடித்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர். இருவருக்கும் இந்த முன்விரோதமும் உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, வசந்தராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
