இருவரை கொலை செய்ய திட்டம் ஆயுதங்களுடன் 5 பேர் கைது
இருவரை கொலை செய்ய திட்டம் ஆயுதங்களுடன் 5 பேர் கைது
ADDED : ஜூன் 09, 2026 08:31 PM
வானுார்: கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நாவற்குளம் முந்தரிதோப்பில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் ஆரோவில் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடன், இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும், அங்கிருந்த ஒரு கும்பல் தப்பியோடியது. போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், கோட்டக்குப்பம் அமீர் அம்ஜான் மகன் முகமது ஆசிக், 22; முகமது இப்ராஹிம் மகன் இர்பான், 19; பக்கீர் முகம்மது மகன் அகமது ஹசேன், 27; முகமது யாசின் மகன் அகமது இம்ரான், 18; அனுமந்தை முருகேசன் மகன் குணசீலன், 24; என தெரிந்தது.
கடந்த ஜனவரி மாதம் சின்ன கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரவுடியான அப்பு, 24; என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
இந்த வழக்கில், புதுச்சேரி லாஸ்பேட்டை விக்கி, தமிழ்மணி உட்பட 10க்கும் மேற்பட்டோரை கோட்டக்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், ஜாமினில் வெளியே வந்த விக்கி, தமிழ்மணி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் கொலை வழக்கு தொடர்பாக வானுார் கோர்ட்டில் ஆஜராக இருந்தனர். இந்த தகவலை அறிந்து, இருவரையும் வெட்டிக் கொலை செய்ய 5 பேரும் தயார் நிலையில் இருந்தது தெரிய வந்தது.
உடன், போலீசார் 5 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.
